மக்களைத் தேடி மருத்துவத்துக்கு உலக அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஒன்றிணைக்கும் பணிக்குழு விருது (United Nation Interagency Task Force Award) அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது!

ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.
ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஒன்றிணைக்கும் பணிக்குழு விருது!

சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி – கண்காணித்து – மேம்படுத்தி வரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.