கருப்பு கண்ணாடி போட்டதால மக்கள் கஷ்டம் தெரியலையா?: பிரேமலதா!

சென்னை விமானப் படை சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் விமானப் படை சாகச நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைக் காண சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சுமார் 15 லட்சம் மக்கள் வரை குவிந்தனர். அதே சமயம் ஒரே நேரத்தில் அதிகளவில் மக்கள் குவிந்ததால் பல்வேறு அசவுகரியங்கள் ஏற்பட்டது. மக்கள் குடிநீர் இல்லாமலும், புழுக்கத்திலும் தவித்தனர். வெயில் காரணமாக ஏற்பட்ட நீர் சத்து குறைப்பாட்டால் மயக்கம் அடைந்த 90 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகச நிகழ்ச்சிக்கு வந்த மக்களுக்கு தமிழக அரசு உரிய வசதிகளை செய்துத் தரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்வு சாவு நிகழ்வாக மாறியது கண்டனத்துக்கு உரியது என்றும், தமிழக முதல்வர் அவர்களும், தமிழக அரசும் ஒரு மாதமாகவே 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த விமான சாகச நிகழ்ச்சி பார்க்க வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள் என்றும் அதை நம்பி மக்களும் வந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், மெரினாவில் எந்தவித பாதுகாப்பு முன்ஏற்பாடுகள் செய்யாமல் 5 உயிர்கள் பலியாகியுள்ளது, நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்ற பிரேமலதா, இந்த நிகழ்வு அரசினுடைய நிர்வாக சீர்கேட்டிற்கு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என்று குற்றம்சாட்டினார்

உலகமே வியக்கக்கூடிய அளவு விமானப்படையினர் சாகச நிகழ்வை மிகச்சிறப்பாக செய்து முடித்துள்ளனர் என்றும், ஆனால் பாதுகாப்பு தர வேண்டிய தமிழக அரசு எந்தவித பாதுகாப்பும் செய்யாமல் தவறவிட்டது கண்டனத்துக்கு உரியது என்றும் விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து, “மக்கள் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சரியான போக்குவரத்து வசதி, குடிநீர், கழிவறை மற்றும் அவசர மருத்துவ உதவி போன்ற எந்தவித வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை. வயதானோர், கர்ப்பிணிகள், மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாகச நிகழ்வை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டி அறிவுறுத்தி இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், “மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தமிழக அரசு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தங்களுக்கு மட்டும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டும் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டும் இருந்ததனாலோ என்னவோ மக்களின் கஷ்டம் அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டதோ?” என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.