மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய அமமுகவினர் கைது: டிடிவி தினகரன் கண்டனம்!

மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய அமமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு அருகே இயங்கும் மதுபானக்கடையை அகற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். மக்கள் நலனுக்காக ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்ட காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திருச்சி மாவட்டம் சீனிவாசா நகரில் பள்ளிகளுக்கு அருகாமையில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பொதுமக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.செந்தில்நாதன் அவர்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே உறையூர் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட தனியார் மனமகிழ் மன்றத்தை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போதும் கைது செய்த காவல்துறை, தற்போது பொதுமக்களின் நலனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வரும் போதெல்லாம் அடக்குமுறையும், அதிகாரப்போக்கும் அதிகரிக்கும் என்பதற்கு ஏற்ப, அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கும் அனுமதி மறுப்பதும் திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இடத்திற்கு அருகே பள்ளிகள் இருப்பதை காரணமாக கூறி அனுமதி மறுத்திருக்கும் காவல்துறை, அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுபானக்கடையை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.