தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவுச் சின்னங்களும் வரலாறும் அவர் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு நாட்டு விடுதலைக்காகச் சிறை ஏகியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவருமான தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாள்.

கடந்த ஆண்டு, அவரது நூற்றாண்டை முன்னிட்டு, இம்மானுவேல் சேகரனார் நல்லடக்கம் செய்யப்பட்ட பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது நமது திடாவிட மாடல் அரசு. அவரது நினைவுச் சின்னங்களும் வரலாறும் அவர் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.