காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து!

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் வெற்றி ஜனநாயகத்துக்கும் இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை 3 கட்டங்களாக நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்த 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமான ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஜேகேஎன்,பிபிஐ கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்து களமிறங்கின. அங்கு 10 ஆண்டுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டதால் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்றன. ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில், இந்தக் கூட்டணி 49 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சி 56 தொகுதிகளில் போட்டியிட்டு 42 இடங்களிலும், 39 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஒரே தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட், அந்த தொகுதியை வசமாக்கியது. ஜேகேஎன்பிபிஐ கட்சி 4 தொகுதியில் போட்டியிட்டு நான்கிலும் தோற்றது. 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 29 இடங்களை கைப்பற்றியது. 81 தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்றது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். உமர் அப்துல்லா புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியானது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பெற்றுள்ள வெற்றி ஜனநாயகத்துக்கும் இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

அமோக வெற்றி பெற்ற ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கும், வாழ்த்துகள்! இது இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநில அந்தஸ்தை மீண்டும் மீட்டெடுப்பதற்கான விருப்பங்ககளை நிறைவேற்றுவதற்காக மக்கள் அளித்துள்ள தீர்ப்பு இது. இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீர் மக்களின் நம்பிக்கையையும் மதிக்கும் நியாயமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.