கோபிசெட்டிபாளையம் அருகே கூலித் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

கோபி அருகே கூலித் தொழிலாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்ய வலியுறுத்தி இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பாளையம், கிரிபள்ளம் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி மோகன்லால் (55). இவர் தனது விவசாய தோட்டத்தில் சந்தன மரம் உள்பட பல்வேறு மரங்கள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் மோகன்லால் தனது தோட்டத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக மோகன்லால் தோட்டத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்தார். எனினும், அங்கு மோகன்லால் இல்லை.

தகவல் அறிந்த வந்த கோபி டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கோபி அருகே மொடச்சூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கண்ணன் (50) எனத் தெரியவந்தது. அவரது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்துள்ளது. அவர் இறந்து கிடந்த இடத்தில் அரிவாள் இருந்துள்ளது. இதனால் மோகன்லால், கண்ணன் இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம். அப்போது மோகன்லால் சுட்டத்தில் கண்ணன் இறந்திருக்க கூடும் என போலீஸார் சந்தேக்கின்றனர். தவிர, மோகன்லால் தனது சுய பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற ஏர்கன் (எஸ்பிபிஎல்) வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

எனினும், கொலைக்கான முழுக் காரணம் எதுவும் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக கோபி போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மோகன்லாலை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கூலித் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணன் சுட்டு கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை கொளப்பலூர் சாலை மொடச்சூர் சந்தை அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்ணனை சுட்டுக் கொன்றவரை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்து வந்த கோபி போலீஸார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் கொளப்பலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.