திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வீட்டின் மீது விழுந்தது. அந்த வீட்டில் இருந்த ஏழு பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனினும், கனமழை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. திருவண்ணாமலை கோயில் பின்புறம் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் திடீரென ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண் சரிவின் போது 14 அடி உயர பாறை ஒன்று உருண்டு 2 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதன் காரணமாக ராஜ்குமார் என்பவரின் வீட்டின் மேல் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் ராஜ்குமார், ராஜ்குமாரின் மனைவி மீனா மற்றும் குழந்தைகள் உள்பட ஏழு பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள அதிகாரிகள் முயன்றபோதும், இணைப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை கண்டுபிடித்து மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததால் ஒரு வீடு முற்றிலும் மணலால் மூடப்பட்டுள்ளது. அந்த வீட்டின் மேட்டுப் பகுதியில் ஒரு பாறை எப்போது வேண்டுமானாலும் உருண்டு விழலாம் என்ற நிலையில் உள்ளது. மண் அரிப்பு மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இடிபாடு ஏற்பட்ட வீட்டில் ஏழு பேர் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அவர்கள் அதற்கு கீழ்தான் இருக்கிறார்களா அல்லது வெளியே எங்கேயாவது சென்றுள்ளார்களா என்பது தெரியவில்லை. மண்ணை தோண்டி பார்க்கும்போதுதான் முழு விவரமும் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.
மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் மிகப்பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமான வகையில் இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மண்ணை அப்புறப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடும்போது, ராட்சத பாறை சரிந்து விழக்கூடும் என்பதால் அந்தப் பகுதியில் வசித்து வந்த அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு (NDRF) தகவல் கொடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நள்ளிரவில் திருவண்ணாமலை வந்தடைந்தனர். மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க மோப்ப நாயைப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதற்காக, மோப்ப நாய்கள் ரூபி, மிர்ஸி ஆகியவையும் வரவழைக்கப்பட்டன. மேலும், அரக்கோணத்தில் இருந்தும் ஹைட்ராலிக் ஏர் லிஃப்டிங் பேக் உள்ளிட்ட மீட்புப் பணிக்கான சில உபகரணங்களையும் வரவழைத்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், அந்த வீடு அமைந்துள்ள பாதை குறுகலாக இருப்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வர முடியாத சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. இரவில் மழை தொடர்ந்து வந்ததாலும், மேலும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாலும் மீட்பு பணி தொடங்கவில்லை. இந்நிலையில் இன்று விடியற்காலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீயணைப்புப் படையினர் மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.