ஆட்சி இருக்கிறது என்கிற ஆணவமா?: எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை மதிப்பது இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு இபிஎஸ் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு முன்வைப்பதே வேலையாக போய்விட்டது என்றும், அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதே இல்லை என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது. இதுமட்டுமன்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழலே உள்ளது.

குற்றச்சாட்டு வைப்பதே எனக்கு வேலையாக போய்விட்டது என்று கூறும் மு.க.ஸ்டாலின் அவர்களே.. திமுக ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனது. கடமை. அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து செயல்படுத்துவது அரசின் கடமை. அதை செய்யாத, எந்த திறமையும் இல்லாத ஒரு முதல்வரிடம் இப்படிப்பட்ட மடைமாற்றும் பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும்.

திமுகவிடம் நாகரிகத்தையோ, மக்கள் மீதான அக்கறையோ எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும், மு.க.ஸ்டாலினின் சமீபத்திய தரக்குறைவான பேச்சுகளே அதற்கான மிகப்பெரிய சான்றாக உள்ளது. நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் முடிந்தால் மக்கள் பணி செய்யுங்கள், இல்லையேல், நிர்வாகத் திறனில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். ஆட்சி இருக்கிறது என்ற ஆணவத்தில் நீங்கள் பேசும் திமிர் பேச்சிற்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் திண்​டிவனம் அருகே பாதிராபுலியூரில் புயலால் பாதிக்​கப்​பட்ட 500 குடும்​பங்​களுக்கு அரிசி, மளிகைப் பொருட்​கள், போர்வை, காய்கறி உள்ளிட்​ட​வற்றை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வழங்​கினார்​. அதே​போல, மயிலம் மற்றும் திண்​டிவனத்​தில் மழையால் பாதிக்​கப்​பட்​டுள்ள பகுதி​களைப் பார்​வை​யிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்​கினார்.

பின்னர் அவர் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “புய​லால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். எனது குற்​றச்​சாட்டு​களுக்கு ​முதல்​வர் உரிய ப​தில் அளிப்​ப​தில்லை” என்​றார்.