மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக வரும் டிச.9-ல் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்: அப்பாவு!

“தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் டிச.9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் நாளில், மாநில அரசின் அனுமதி பெறாமல், மதுரை மாவட்டத்தில் மத்திய அரசு அனுமதித்துள்ள டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கான உரிமையை ரத்து செய்வது குறித்த அரசின் தனித்தீர்மானத்தை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டு வருகிறார்” என்று, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம், இன்று சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு, ஏகமனதாக வரும் டிச.9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்கள் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளான டிச.9-ம் தேதியன்று, கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையினை தமிழக நிதி அமைச்சர் தாக்கல் செய்யவிருக்கிறார். அன்றைய தினம், மாநில அரசின் அனுமதி பெறாமல், மதுரை மாவட்டத்தில் மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கான உரிமையை ரத்து செய்வது குறித்த அரசின் தனித்தீர்மானத்தை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டு வருகிறார்.

இரண்டாவது நாள் டிச.10-ம் தேதியன்று, விவாதங்கள் நடைபெற்று பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும். கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையும் நிகழ்த்தப்படும். இரண்டு நாட்களிலும் கேள்வி நேரம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.