மருத்துவத்துறையை அதல பாதாளத்தில் தள்ளிய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

மருத்துவத்துறையை திமுக அரசு அதல பாதாளத்தில் தள்ளியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மின்வெட்டு காலங்களில் அரசு மருத்துவமனைகள் முடங்காமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளோ, எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்க போதிய மறுத்துவர்களோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதல பாதாளத்தில் தள்ளியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

திமுக ஆட்சியில் முதல்-அமைச்சரோ, மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது குறித்த எந்த அக்கறையும் இன்றி கூட்டணி கட்சி கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார். அமைச்சரோ தனக்கொரு துறை இருப்பதையே மறந்துவிட்டு வாரிசுக்கு பிறந்தநாள் விழா எடுப்பதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார். மக்கள் பற்றிய சிந்தனையே இல்லாத திமுக ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு தங்கள் துறைசார் பணிகளை இனியாவது கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.