தமிழ்நாட்டில் பேரிடர் வந்தால் ஒன்றிய அரசு கைவிரித்துவிடுகிறது: செல்வப்பெருந்தகை!

பேரிடர் வந்தால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கிறது. பேரிடர் வந்தாலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்து விடுகிறது. கடந்த ஆண்டு மாநில அரசு கேட்ட 29 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. இப்போது குறைந்தபட்சம் 2 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதையும் ஒன்றிய அரசு இதுவரை கொடுக்கவில்லை.

தமிழ்நாடு என்பது இந்தியாவில்தான் இருக்கிறதா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம், இந்தியாவில்தான் இந்த மாநிலம் இருக்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.