சீமான் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசிய வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என சீமான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது எனவும் கூறி, சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.