மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை: நவாஸ்கனி எம்.பி கடிதம்!

தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கடிதம் எழுதி உள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறன. தற்போது 34 ராமேசுவரம் மீனவர்களையும் 3 மீன்பிடி படகுகளையும், இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.