ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியை பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரை உடன் இன்று தொடங்கி உள்ளது. நாளை காலை 11மணிக்கு மக்களவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மகாலட்சுமி தொடர்ந்து ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது மிகவும் பெருமைக்குரியது. உலக பீடத்தில் இந்தியா தன்னை நன்கு நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எனது மூன்றாவது ஆட்சியின் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். 2047ல், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா தனது விக்சித் பாரத் நோக்கத்தை நிறைவேற்றும். இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்.
இந்த நாடாளுமன்ற அமர்வின் போது பல வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்கள் நிறைவேற்றப்படும். அவை விரிவான விவாதத்திற்கு பிறகு நாட்டைப் பலப்படுத்தும் சட்டங்களாக மாறும். குறிப்பாக, பெண்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்யவும், மதவெறி அல்லது நம்பிக்கை அடிப்படையிலான பாகுபாடுகள் அகற்றப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ’சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்’ என்ற மந்திரத்தை வலியுறுத்திய மோடி, வேகமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும், சீர்திருத்தத்திற்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.