திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டப்படி பிப்.4-ல் போராட்டம்: இந்து முன்னணி!

திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டப்படி பிப்.4-ல் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்தார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோவையில் நேற்று (பிப்.01) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அண்மைக் காலமாக திருப்பரங்குன்றம் முருகன் மலையை, சிக்கந்தர் மலை என உரிமை கொண்டாடி பிரச்சினைகள் ஏற்பட்டன. ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, பிரியாணி கொண்டு சென்று சாப்பிட்டு, மலையின் புனிதத்தை கெடுத்தார். எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்துக்களுக்கு மிகப்பெரிய அநீதி நடக்கிறது என்பது பக்தர்களுக்கு புரிந்தது. எனவே தான், திருப்பரங்குன்றத்தைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பக்தர்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் வரும் 4-ம் தேதி, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்மிகப் பெரியோர்கள் உள்ளிட்ட பலர் தார்மீக ஆதரவு தந்துள்ளனர்.

மடாதிபதிகள், பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். இது மிகுந்த உத்வேகம் அளிக்கிறது. இவற்றையெல்லாம் ஒடுக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் தொடர்பாக சுவரொட்டி ஒட்டுபவர்கள், நோட்டீஸ் வழங்குபவர்களை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் மாமிசம் சாப்பிட்டவர்கள், அங்கிருந்த சமணர் வாழ்ந்த படுக்கைகளில் பச்சை பெயிண்ட் அடித்தவர்களை கைது செய்யாத காவல்துறையினர், முருகன் மலையைக் காக்க ஜனநாயக முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.

ஆன்மிக அன்பர்களை மிரட்டும் அரசாக திமுக உள்ளது. தமிழக அரசு இந்துக்களை ஒடுக்க நினைக்கக் கூடாது. பிப்ரவரி 4-ல் திட்டமிட்டபடி அறப்போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டம், தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.