முகூர்த்த நாளில் பத்திரப் பதிவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் பிப்.2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று அரசு அறிவித்த நிலையில் ஊழியர்கள் பணியை புறக்கணித்ததால் பத்திரப் பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
முகூர்த்த நாளான பிப்.2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கூடுதலான பத்திரப் பதிவுகள் இருக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் செயல்படும். இந்த விடுமுறை நாளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும்” என அரசு அறிவித்தது.
இதனிடையே, பதிவுத் துறையின் ஊழியர் சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் இணையவழிக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பிப்.2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டால் அதனை புறக்கணிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன் படி, நேற்று பத்திரப் பதிவு அலுவலக ஊழியர்கள், அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. அதனால் பத்திரப் பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் பொதுமக்களும் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களும் நேற்று செயல்படவில்லை. காரைக்குடி சார்பதிவாளர்-1 மற்றும் 2 ஆகிய இரு அலுவலகங்களை கடைநிலை ஊழியர்கள் பெயரளவில் திறந்து வைத்திருந்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 57 பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படவில்லை. இதுபோல, நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் நேற்று பத்திரப்பதிவு நடைபெறவில்லை. கோவை, ராணிப்பேட்டை, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களும் பூட்டியே கிடந்தன.