சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இசைத்துறைக்கான உயர்ந்த விருதாகக் கருதப்படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான 67-வது கிராமி விருது விழா, கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகி சந்திரிகா டாண்டன் (71), தனது ‘திரிவேணி’ என்ற இசை ஆல்பத்துக்காக ‘சிறந்த தற்கால இசை ஆல்பம்’ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார்.
இந்த ஆல்பத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர் வாவ்ட்டர் கெலர்மேன், ஜப்பானிய இசைக்கலைஞர் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து உருவாக்கியுள்ளார். 7 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பம் இந்திய கிளாசிக் இசை,வேத மந்திரங்கள் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரிகா டாண்டனுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.சென்னையில் பிறந்த சந்திரிகா டாண்டன், பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் மூத்த சகோதரி ஆவார்.