அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் என சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை. பணம் கொடுத்து வாக்கைப் பறிக்கும் ஈனர்களிடம், தங்களின் சனநாயக உரிமையை அறியாமையால் ஏமாறும் மக்களைக் கண்டு ‘தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா?’ என்று நெஞ்சம் கொதித்த இலட்சியவாதி.

‘மதுவை விற்று வரும் வருமானம் குஷ்டரோகியின் கையில் வெண்ணெய்க்கு ஈடானது’, என்று கூறி மதுவிலக்கை தன் உயிருள்ளவரை விலக்க மறுத்த மக்கள் தலைவர். நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும், கொள்கைப்பற்றுறுதியையும் இனம்கண்டு, ‘தம்பி வா தலைமையேற்க வா’ என்று தனக்கடுத்துத் தலைமை பொறுப்பேற்க நாவலர் நெடுஞ்செழியனை அழைத்த நேர்மையாளர்.

தமிழ் இலக்கியமும், தமிழர் வரலாறும் அரசியல் மேடைகளிலும் அதிகம் பேசப்படக்கூடிய வழக்கத்தை உருவாக்கிய பெருமகன். அவதூறு பரப்புரைகளும், அரசியல் பழிவாங்கலும் இல்லாது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து நாகரீக அரசியல் மேற்கொண்ட பண்பாளர்.

யாரும் படிக்க வைக்காமல் தன்னுடைய முயற்சியால் இரண்டு முதுகலை பட்டம் பெற்ற பேரறிஞர் பெருந்தகை. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.