ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி பெங்களூருவில் தொடக்கம்!

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ -வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

இந்தியாவில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஏரோ இந்தியா என்ற பெயரில், இந்தியாவில் மற்றொரு மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் பிரயாக்ராஜின் மகா கும்பமேளா சுயமரியாதைக்கான கும்பமேளா. மறுபுறம் ஏரோ இந்தியா ஆராய்ச்சிக்கான கும்பமேளா. பிரயாக்ராஜின் கும்பமேளா உள்நாட்டை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த ஏரோ இந்தியாவின் கும்பமேளா வெளிப்புறத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பிரயாக்ராஜ் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது, அதே நேரத்தில் ‘ஏரோ இந்தியா’ இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் மகா கும்பமேளா (பிரயாக்ராஜில்) நடைபெறுகிறது. மறுபுறம் தைரியம் மற்றும் ஆயுதங்களின் மகா கும்பமேளா பெங்களூருவில் நடத்தப்படுகிறது.

பரஸ்பர மரியாதை, ஆர்வம் மற்றும் நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உறவை மேம்படுத்த ‘ஏரோ இந்தியா’ கண்காட்சி நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ராணுவ ரீதியாக இந்தியா வலிமை பெற வேண்டும். பாதுகாப்பு பலவீனமாக இருந்தால், அமைதியை ஒருபோதும் அடைய முடியாது. நாடு வலுவாக மாறுவதன் மூலம் மட்டுமே சிறந்த உலக ஒழுங்கிற்காக பாடுபட முடியும். உலகளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும், அமைதியும் செழிப்பும் வளரும் ஒரு நாடாக இந்தியா உள்ளது. இன்றைய நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களைச் சமாளிக்க நாம் ஒன்றிணைந்து முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், ஆயுதப் படைகளின் மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள், விமானப் போக்குவரத்து, விண்வெளித் துறையைச் சேர்ந்த தொழில்துறைத் பிரதிநிதிகள், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் நிறுவனத்தினர், கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டார்கள்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு, உலகளாவிய விண்வெளி நிறுவனங்களின் அதிநவீன தயாரிப்புகளுடன் இந்தியாவின் வான்வழி வலிமையையும் உள்நாட்டு நவீன கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்தும். தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் – உலகுக்காக தயாரிப்போம் என்ற இந்தியாவின் பார்வையை மையமாகக் கொண்டு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்சார்பு செயல்முறையை விரைவுபடுத்த சர்வதேச ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்நிகழ்வு கருதப்படுகிறது.

மொத்தம் 42,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் 150 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 900 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கிறார்கள். 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. 30 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இந்த 5 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.