பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்துக்கும் அகத்திய முனிவர் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் கொண்டாடப்பட இருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமத்தின் 3ம் ஆண்டு நிகழ்வுகள் நேற்று தொடங்கியதை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பு நடைபெற இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மகா கும்பமேளா நடைபெறும் இந்த வேளையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் இது கூடுதல் சிறப்பு பெறுகிறது.
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும், காவேரிக்கும் கங்கைக்கும் இடையிலான நீடித்த இணைப்பு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. முந்தைய இரண்டு பதிப்புகளின் போது ஏற்பட்ட மக்களின் இணக்கமான உணர்வுகளும், அனுபவங்களும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின் அழகையும், இரு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இடையேயான வலிமையான இணைப்புகளையும் காட்சிப்படுத்தின.
காசி தமிழ் சங்கமம் இதுபோன்ற நினைவுகளை புதுப்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தும். முழு மனதுடன் மக்கள் பங்கேற்பதால், இந்த சங்கமம் நிகழ்ச்சிகள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ உணர்வை வழிநடத்துகின்றன.
பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்துக்கும் அகத்திய முனிவர் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு நிகழ்வில் கொண்டாடப்பட இருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகிறேன். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள், மகா கும்பமேளாவில் பங்கேற்பதுடன் அயோத்தியின் ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கும் செல்வார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இது போன்ற ஆன்மிக தலங்களுக்கு பயணிப்பதன் வாயிலாக பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆசி பெற்றதாக உணர்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
வளர்ந்த பாரதத்தைக் கட்டமைக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நாடு முன்னேறி வரும் நிலையில், நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழும். தமிழ்நாட்டிலிருந்து காசிக்குப் பயணிக்கும் மக்கள், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சிறந்த நினைவுகளை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் காசி தமிழ்ச் சங்கமத்தின் 3-ம் ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களுக்கு வாரணாசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காசி தமிழ்ச் சங்கம் 3.0-வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய முதல் குழு வாரணாசிக்கு சென்றடைந்தது. மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக, மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான காலத்தால் அழியாத பிணைப்புகளைக் கொண்டாடவும், நாகரிக இணைப்புகளை வலுப்படுத்தவுமான ஒரு உத்வேக முயற்சி இது பார்க்கப்படுகிறது.
வாரணாசி சென்றடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை, மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் செயலாளர் வினீத் ஜோஷி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக குழுவினரை அன்புடன் வரவேற்றனர். வாரணாசி ரயில் நிலையத்தில், சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, ஸ்வஸ்திகா மந்திரங்கள் முழங்க மலர் தூவி, மாலைகள் அணிவித்து முதல் குழுவினர் வரவேற்கப்பட்டனர். “வணக்கம் காசி” என்ற வாசகத்துடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றில் இருந்து 4 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.