மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்ற மூடநம்பிக்கை உள்ளது: எச் ராஜா!

‛‛தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்ற மூடநம்பிக்கை உள்ளது. அதனால் எல்லோரும் மத்திய அரசை எதிர்த்து பேசுகிறார்கள். விஜய் மட்டுமில்லை. தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடருவோம் என்று கூறும் அரசியல் தலைவர்கள் தங்களின் குழந்தைகள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசு பள்ளியில் சேர்க்கட்டும் பார்க்கலாம்” என்று எச் ராஜா சவால் விட்டுள்ளார்.

சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் ரூ.2152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசியக் கல்வி கொள்கையினை ஏற்றுக்கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். ஆனால் தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று குற்றம்சாட்டி தமிழக அரசு அதனை ஏற்காமல் உள்ளது. இதனால் சமக்ர சிக்சா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.

இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பூதாகரமாகி உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும் என்றும், மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, நிதி ஒதுக்கமாட்டோம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் கோவையில் நேற்று இரவு பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மும்மொழி கொள்கையை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக எச் ராஜா கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்ற மூடநம்பிக்கை உள்ளது. அதனால் எல்லோரும் மத்திய அரசை எதிர்த்து பேசுகிறார்கள். விஜயின் குழந்தை எங்கு படிக்கிறது? இருமொழி கொள்கையிலேயே? சமச்சீர் கல்வியிலா? சொல்லுங்கள். இந்த அமைச்சர்கள், வார்டு கவுன்சிலர்கள் யாராவது தங்களின் குழந்தைகளை சமச்சீர் கல்வியில் சேர்த்து உள்ளார்களா? திமுக தலைவர்களின் குழந்தைகள் எல்லாம் மும்மொழி, நான்கு மொழி கொள்கை படிக்கும். வெளிநாட்டில் படிக்கும். ஓரளவு மிடில் கிளாஸை விட வளர்ந்த குடும்பத்துக்கு குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் படிப்பதை தடுக்க முடியவில்லை. ஆனால் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை, விவசாயி, தொழிலாளியின் குழந்தைகளை மும்மொழி கொள்கையை படிக்காதே என்று குரல்வளையை நெறிக்கிறார்கள். இது என்ன புத்திசாலி தனம்?

இது விஜய்க்கு மட்டுமில்லை. தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடருவோம் என்று கூறும் அனைவரும் நாளை காலை உங்களின் குழந்தைகளை தற்போது படிக்கும் பள்ளியில் இருந்து அழைத்து வந்து கார்ப்பரேஷன் பள்ளியில் சேருங்கள். அனைத்து அரசியல் தலைவர்கள் தங்களின் குழந்தைகள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசு பள்ளியில் சேர்க்கட்டும். அப்போது அவர்கள் யோக்கியமானவர்கள், நல்லவர்கள் என்று நானே ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.