ஆர்.பி உதயகுமார் எங்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்நிலையில், எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடையாது எனவும், ஓ.பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கை குறைபாட்டில் தான் ஜெயலலிதா இருந்தார், என்னிடமே அதை தெரிவித்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓபிஎஸ், யாரிடமும் நான் என்னை அழைத்துக் கொண்டு போய் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்க்க வேண்டும் என்று சொன்னதே கிடையாது எனவும், ஆர்.பிஉதயகுமார் எங்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடையாது என பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இதுதொடர்பாக வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:-
ஓபிஎஸ்க்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். ஏன் என்று சொன்னால், அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று மக்களிடத்திலே அந்த செய்தி சென்று விடக் கூடாது. ஜெயலலிதா எனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஜெயலலிதா நம்மோடு இருந்த போது இதே தேனி மாவட்டத்தில் இவர் தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, 2010 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு, ஜெயலலிதா இந்த சாமானிய தொண்டரான உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்கள். அன்று முதல் அவர் என்னென்ன நடவடிக்கைகளை தன் அதிகாரத்திற்கு போட்டியாகவோ, இணையாகவோ, எந்த வடிவத்திலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் எடுத்து வைத்த முயற்சிகள் எல்லாம் அவருடைய மனசாட்சிக்கு தெய்வ சாட்சியாக விட்டுவிடுகிறேன்.
அதே 2010 ஆம் ஆண்டு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலே செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிற போது இவரை தள்ளி வைத்துவிட்டு ஜெயலலிதா என்னை அந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள, தேனி மாவட்டத்துடன் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்குவதற்கு இந்த சாமானிய தொண்டன் உதயகுமாருக்கு ஆணையிட்டார்கள் என்பதும் அந்த வரலாறையும் அவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோன்று 2011 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், தேனியில் தங்கத்தமிழ் செல்வன் குடும்ப அந்த திருமண விழாவிற்கு என்னை அங்கே பங்கேற்று ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தியும், அவரின் பரிசையும் கொடுப்பதற்கு எனக்கு ஆணையிட்டார்கள் என்பதையும் தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நாடாளுமன்றத்தில் வெற்றிக்காக எனக்கு பணியாற்றுகிற வாய்ப்பு கிடைக்கிற போது தலைமைக்கும், இரட்டை இலை விசுவாசமாக நான் பணியாற்றி, தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்பு நழுவி போகிற போது தேனி மாவட்டத்தில் இரட்டை இலை மலர்ந்தது அதற்கு இந்த சாமானிய தொண்டனுடைய அந்த விசுவாசமான உழைப்பு எப்படி என்பதை நீங்கள் வேண்டுமானால் உங்கள் வசதிக்காக மறந்து இருக்கலாம் அல்லது மறைக்க முயற்சிக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைத்தால் மனசாட்சி இருந்தால் எளிய தொண்டனிடம் விசாரித்து பாருங்கள் நான் விசுவாசத்தோடு இரட்டை இலை சின்னத்திற்காக எப்படி உழைத்தேன் என்பதையும், எப்படி பாடுபட்டேன் என்பதையும் அந்த தொண்டர்கள் சான்றாக சொல்வார்கள்.
ஜெயலலிதா தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைபாட்டில் தான், தங்கள் மீது வைத்திருந்த அபிமானத்தை பற்றி இந்த சாமானிய தொண்டனான என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்பதை நான் வெளியே சொன்னால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது. சத்தியம் செய்து இப்போதும் சொல்கிறேன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான தொண்டர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி உழைத்து வளர்த்து, இன்னைக்கு மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தின் வழிநடத்தி வரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன். அவர்களின் மறு வடிவமாக இருக்கிற எடப்பாடியார் ஆணையிட்டால் இந்த நிமிடமே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கிற பொறுப்பு, கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை பொறுப்பிலிருந்தும், மாவட்ட கழக செயலாளர், ஏன் சட்டமன்ற உறுப்பினர் என்கிற பொறுப்பணியில் கூட கழகத்தினுடைய வளர்ச்சிக்காக, கழகத்தினுடைய வெற்றிக்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அந்த வெற்றியை வரலாறுக்காக நான் என்னை தியாகம் செய்துவிட்டு ஒரு நாளும் தயங்கவில்லை இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கும் நான் தயங்கவில்லை.
அன்றைக்கு அம்மா அவர்கள் இருந்தபோது டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள் தயவு செய்து அதை சொல்லுங்கள், உங்களுடன் நான் எந்த நிலையில் அமர்ந்திருந்தேன் என்பதை நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன்.
உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் நீங்க போவீர்கள் என்பது தான் இந்த சமீப கால நடவடிக்கை, உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் பிரச்சனை. இப்போது பிரச்சனை நீங்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் நீங்கள் இப்போது நடத்துகிற இந்த செயலிலே உண்மை இருக்கிறது என்பது அப்பாவி தொண்டர்கள் அறிய மாட்டார். ஏனென்றால் எங்களைப் போன்றவர்கள் அதை நன்றாக அறிவோம், அந்த அப்பாவி சாமானிய ஏழை எளிய தொண்டர்களுக்கும் மக்களுக்கும் இந்த உண்மை புரிய வேண்டும் இதை நான் சத்தியமாக தெய்வச் சாட்சியாக சொல்கிறேன் அத்தனையும் உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.