ஓ. பன்னீர்செல்வம் ஒரு கொசு என்றும் அவரைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை ஓபிஎஸ் இல்லத்தில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், ”ஒரு காலத்தின் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அதிமுகவை, இன்று இடைத்தேர்தலில்கூட போட்டியிட முடியாத கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார். அதிமுக வெற்றி பெறக்கூடிய ரகசியம் தன்னிடம் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம் ஓபிஎஸ் குறித்து கேட்டதற்கு, “ ஓ. பன்னீர்செல்வம் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அந்தக் கொசுவைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை. ரகசியம் என்று கூறி நான்கு ஆண்டுகளுக்கு மேலான ஓபிஎஸ் செய்கிறார். தொண்டர்கள் மத்தியில் இது எடுபடாது” என்றார்.
மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய ஜெயக்குமார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும் இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறோம். மொழி என்பது தனிப்பட்ட விஷயம். ஹிந்தி பிடிக்கும் என்றால் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள். தமிழகத்தில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. தமிழ் தாய்மொழியாக இருக்கின்றது. தமிழ் மொழி அழியாமல் இருக்க பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஹிந்தி மொழித் திணிப்பை தமிழக மக்கள் ஒரு காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.