அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது: ஓ.பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது. அதற்கு சில ரகசியம் தன்னிடம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்க குழு தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். கட்சியின் சட்டவிதிகளை தேவைக்கேற்ப திருத்தம் செய்யலாம் என்றாலும், ஒரே ஒரு விதியை மட்டும் எக்காலத்திலும் மாற்ற முடியாது என்று தெளிவாக எழுதி வைத்தார். கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் அது. எம்.ஜி.ஆர் வகுத்து தந்த விதியையே மாற்றி அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். எடப்பாடி பழனிசாமி விதிகளுக்கு மாறாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொண்டர்களின் மனநிலையை கருதாமல், தன்னை முன்னிலைப்படுத்தி வந்ததால் அ.தி.மு.க. தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

தற்போது இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதன்முறையாக நம் தரப்புக்கு கிடைத்த வெற்றி. அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் தலைமைக்கு வரலாம் என்ற புதிய வரலாறு விரைவில் உதயமாகப் போகிறது. அந்த நிலை உறுதியாக வரப்போகிறது. அதற்காகத்தான் நாம் தொடர்ந்து தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறோம். நிச்சயம் நல்ல காலம் பிறக்கத்தான் போகிறது. அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார்.

காலம் கனிந்து வருகிறது சில ரகசியங்களும் அதில் உள்ளது அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை நிலை நிறுத்திட வைராக்கியமாக நாம் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.