“தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று கோவையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களைத் திறந்து வைக்கும் விழா கோவையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, 3 மாவட்ட அலுவலகங்களையும் திறந்துவைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அமித் ஷா கூறியதாவது:-
ஊழல் வழக்குகளில், திமுகவின் அனைத்துத் தலைவர்களும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களின் தலைவர்களில் ஒருவர் வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ளார். மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத மணல் சுரங்கத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், மூன்றில் ஒரு பகுதியினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். சமூகத்தில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளும் திமுகவில் சேர கட்சி அனுமதித்தது போல் தெரிகிறது.
மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மறுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி வழங்கியுள்ளது. மத்திய அரசால் மாநிலம் அநீதியை சந்தித்ததாக முதல்வர் அடிக்கடி கூறுகிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட நிதியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உண்மையான அநீதி நடந்தது தெளிவாகிறது.
மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்வதற்காக இல்லாத பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகும், தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் இடங்கள் குறைக்கப்படாது என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பாஜக நிறுவும். இதன்மூலம், வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோர் துடைத்தெறியப்படுவார்கள். அந்த புதிய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்.
புதிதாக திறக்கப்பட்ட மூன்று பாஜக அலுவலகங்களும் எதிர்வரும் நாட்களில் மக்களுக்காக செயல்பட்டு, மக்கள் கூடும் இடமாக செயல்பட வேண்டும். மத்திய நிதியமைச்சர் சிறப்பான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நடுத்தர மக்கள், விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளார். ஒடிசாவில் பெரும்பான்மை பெற்றுள்ளோம். ஆந்திராவில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். 2025-ம் ஆண்டு டெல்லி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 2026-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக அரசு வீழ்த்தப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி.
தமிழகத்தில் அதிகரித்து காணப்படும் ஊழல் ஒழிக்கப்படும். தேச விரோத சக்திகள் வேரோடு பிடிங்கி எறியப்படும். தமிழ் மொழி, மக்கள் கலாச்சாரத்தை போற்றும் பிரதமராக நரேந்திர மோடி விளங்கி கொண்டிருக்கிறார். செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இன்று தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. வேங்கைவயல் சம்பவம் நடந்து 700 நாட்கள் கடந்த பின்னரும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் கொல்லப்படுகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கனிமவள கொள்ளை தொடர்கிறது. ஊழல் செய்வதில் திமுகவினர் பட்டம் பெற்றவர்களாக திகழ்கின்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்துள்ளார். திமுக முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளில் 1,52,901 கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கியது. பாஜக தலைமையிலான மத்திய அரசு 2014 முதல் 2024 வரை தமிழகத்துக்கு 5,01,337 கோடி வழங்கியுள்ளது.
அனைவரும் உற்சாகத்துடன் செயல்படுங்கள். தமிழகத்தில் அமைய உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புதிய யுகத்தை உருவாக்கும் ஆட்சியாக இருக்கும். வகுப்புவாதம், பிரிவினைவாதம் என்ற சிந்தனைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும். ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.