விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில் கூறியுள்ளதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் விக்ஸித் பாரத் திட்டத்தால், சாதாரண இந்திய ஏழைகளின் பைகள் காலியாகி, பில்லியனர்களின் கருவூலங்களை நிரம்புகிறது. 100 கோடி இந்தியர்கள் செலவழிக்க கூடுதல் வருமானம் இல்லை; 10 சதவிகித இந்தியர்கள் மட்டுமே பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வில் பங்கு பெற்றுள்ளனர்.
மீதமுள்ள 90 சதவிகித மக்கள் அடிப்படை அன்றாடத் தேவைகளைக்கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
இந்தியாவில் வரி செலுத்தும் மக்கள்தொகையில், நடுத்தர மக்களில் 50 சதவிகிதத்தினரின் ஊதியத்தின் உயர்வு, கடந்த 10 ஆண்டுகளாக உயரவில்லை. கிராமப்புறப் பகுதிகளில் வசிப்பவர்களின் ஊதியங்கள் எதிர்மறையான வளர்ச்சியைத்தான் காண்கின்றன. இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தியாவில் வருமான சமத்துவமின்மை 100 ஆண்டுகளின் உச்சத்தை எட்டியுள்ளது. இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை தாங்க முடியாததாகி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.