தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். வயது முதிர்வு சார்ந்த அசவுகரியங்கள் காரணமாக அவர் கடந்த பல ஆண்டுகளாகவே பொதுவெளியில் வருவதில்லை. சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றுவந்தார்.
இந்நிலையில், தயாளு அம்மாளுக்கு நேற்று திங்கள்கிழமை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை க்ரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தயாளு அம்மாளுக்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தயாளு அம்மாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட விவரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தாயாரைக் காண மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தார். தயாளு அம்மாளுக்கு 92 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.