தனியார் பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழிகளை கற்கும் வாய்ப்பு இருக்கும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் அது மறுக்கப்படுகிறது? என்று கனிமொழிக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்மொழி கொள்கைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கடிதத்துக்கு பதில் பதிவை நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அண்ணாமலை கூறியுள்ளதாவது:-
கல்வியில் சமத்துவத்துக்காக உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை ஒருதலைப்பட்சமானது அல்ல. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீது நீங்கள் திணிக்க விரும்பும் கல்வி முறை ஒருதலைபட்சமானது.
உங்கள் குடும்பத்தினரும் உங்கள் அமைச்சர்களும் நடத்தும் தனியார் பள்ளிகள் உட்பட தனியார் CBSE / மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு வழங்கும்போது, எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?
இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் ஆங்கிலத்தில் புலமை பெறவில்லை என்று நீங்கள் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்கு எந்த அளவு ஆங்கில புலமை இருக்கிறது? ஒருவரின் மொழிப் புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கு முன், நமது III, V, மற்றும் VIII வகுப்பு மாணவர்களின் தமிழ் மொழித் திறன் குறித்த சமீபத்திய ASER கிராமப்புற 2024 அறிக்கையைப் படிக்க நேரம் ஒதுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.