தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 வெளியீடு!

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார்.

தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ இன்று வெளியிட்டார். அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய அரசு ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, இதுபோன்ற பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், தமிழக அரசு முதல்முறையாக இம்முறை 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவதற்கு முன்பாக, பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* 2021-22-ல் இருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து எட்டி வருகிறது. 2025-25லும் 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* தமிழ்நாடு 2023-24 ஆம் ஆண்டில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24ல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது.

* தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாக தேசிய சராசரியைவிட அதிகமாகவே இருந்து வருகிறது. 2022-23ல் ரூ.2.78 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக தனிநபர் வருமானத்தில் தமிழகம் நான்காம் இடம் வகிக்கிறது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியை விட மேலே உள்ளது.

* 2023-24ல், சேவைத் துறையானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத்துறை (13%) பங்களித்துள்ளன. வளர்ந்த மாநிலங்களைப் போலவே மாநிலத்தின் இரண்டாம் நிலைத் துறையின் பங்கு 5% அளவில் அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.

* தமிழ்நாட்டில் 2022-23-ல் 6% என்றிருந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கம், 2023-24ல் 5.4% ஆகவும், 2024-25ல் (ஜனவரி 2025 வரையில்) 4.8% ஆகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2019-20ல் 6% என்றிருந்த நகர்ப்புர பணவீக்கம் 2024-25-ல் (ஜனவரி 2025 வரையில்) 4.5% ஆகக் குறைந்துள்ளது

* மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவில் நெல், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62% ஆகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38% ஆகவும் உள்ளன. பயிர்ப்பரப்பில் நெல் தொடர்ந்து முதன்மை நிலை வகித்து வருகிறது. 2019-20ல் மொத்த பயிர்ப் பரப்பில் 32.1% ஆக இருந்த நெல்லின் பங்கு 2023-24ல் 34.4% ஆக அதிகரித்துள்ளது.

* தமிழக விவசாயிகளுக்கு பட்டியலிடப்பட்ட வணி வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் கடன் 2019-20ல் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து, 2023-24ல் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

* 2024-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 2019-20 முதல் 2023-24 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு வர்த்தக வங்கிகள் அளித்துள்ள கடன் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு ரூ.5,909 கோடியிலிருந்து ரூ.20,157 கோடியாக அதிகரித்துள்ளது.

* 2005-06 முதல் 2022-23 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் வறுமை நிலை (ஹெச்சிஆர்) 36.54%-லிருந்து வெறும் 1.43% என வெகுவாக குறைந்துள்ளது.

* சமூகத் துறைக்கான செலவினங்களை தமிழக அரசு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2019-20ல் ரூ.79,859 கோடியாக இந்த ஒதுக்கீடு, 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது, என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.