மதுரை மேலூர் தொழிற்பூங்கா முதல் மதுரை மெட்ரோ வரை மதுரைக்கென 17 திட்டங்களை அறிவித்த தமிழக அரசுக்கு மதுரை மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-
மதுரைக்கென 17 திட்டங்கள், மேலூர் தொழிற்பூங்கா முதல் மதுரை மெட்ரோ வரை.. தமிழக அரசுக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக மதுரை பண்பாடு, தொழில் வளர்ச்சி, அடிக்கட்டமைப்பு மேம்பாடு, அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் நலன் என்கிற ஐந்து மைய அச்சுகளையும் இணைத்து சிந்தித்த 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வைகை நதிக்கரை மேம்பாடு, மாநகராட்சி சாலைகள் மேம்பாடு, தொழில் வளர்ச்சி மூலான வேலை வாய்ப்புகள், அகர மொழிகளின் அருங்காட்சியகம், பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், காலநிலை மாற்றத்திற்கான மதுரைக்கான தேவைகள், மதுரை மெட்ரோ என மதுரைக்கான அறிவிப்புகள் சட்டமன்றத்தில் வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு:
275 கோடி மதிப்பீட்டில் 1000 மாணவிகள் பயன்பெறும் தங்கிப் பயிலும் நவீன வசதிகளுடன் கூடிய 3 விடுதிகள் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 130 கோடி மதிப்பீட்டில் சாலைகளின் தரம் உயர்த்துதல், வைகை ஆற்றங்கரையில் மாநகராட்சிப் பகுதியில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடைபாதைகள், தெருவிளக்குகள், பூங்காங்கள் உருவாக்கம், மதுரை திருப்பரங்குன்றத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் விடுதி வசதிகளுடன் கூடிய புதிய தொழிற் பயிற்சி மையம், 250 கோடி முதலீட்டில் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை மேலூரில் காலணி தொழிற்பூங்கா, 2000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மதுரை மாவட்டம் கருத்தப் புளியம்பட்டியில் புதிய தொழிற்பேட்டை, போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம், உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உறுதிபடுத்தும் துணை திறன்மிகு மையம், மதுரை அரிட்டாபட்டி போன்ற பல்லுயிரினங்கள் வாழும் பகுதிகளைப் பாதுகாக்க 1 கோடி ரூபாய், மதுரை மாநகரத்திற்கு புதிய 100 மின் பேருந்துகள், மதுரை திருமங்கலம் – ஒத்தக்கடை வரையிலான மெட்ரோ 11,368 கோடி திட்டத்திற்கான ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் உடனடித் துவக்கம், மதுரை – சிவகங்கை மரபு சார் சுற்றுலா வழித்தடம் 48 கிலோமீட்டர் மதுரை வெளிவட்டச்சாலை அமைத்திட திட்ட அறிக்கை, 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் புதிய திட்டம், மதுரை உள்ளிட்ட 11 நகரங்களுக்கென தனியான வெப்ப அலை செயல்திட்டங்கள், 10 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான அன்புச் சோலை மையம், மதுரையில் அகர மொழிகளின் அருங்காட்சியகம் இத்தகைய தனித்துவமான, அவசியமான மதுரைக்கான 17 திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மதுரை மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.