வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில் வேளாண் பட்ஜெட் உள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக வேளாண் பட்ஜெட்-2025 தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள், புதிய தொழில்நுட்பங்கள், சிறு குறு விவசாயிகள் நலன், மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட்-2025 வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்! இவ்வாறு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.