உலக நாடுகளில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிபாக்கம் செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்திலுள்ள பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், அரிய ஆவணங்கள் ஆகியவற்றை மின் பதிப்பாக்கம் செய்திடும் திட்டத்தை தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள அரசு அருங்காட்சியகங்களிலும், அந்நாடுகளின் தேசிய நூலகங்களிலும் பல்லாயிரக்கணக்கான பழம் ஓலைச்சுவடிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் இங்கிருந்து கொண்டு சென்ற பழம் ஓலைச்சுவடிகளும், ஆவணங்களும் இந்நாடுகளில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களில் ஏராளமாக உள்ளன. இவற்றின் காலம் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. எனவே, இவற்றையெல்லாம் உடனடியாக மின் பதிப்பாக்கம் செய்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து சேமித்து வைக்கவேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் இவற்றை ஆய்வு செய்வதற்கு உதவ வேண்டும். இதன்மூலம் இதுவரை கிடைக்காத பழந்தமிழ் நூல்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உருவாகும். எனவே, பழந்தமிழ் சுவடிகள், ஆவணங்கள் ஆகியவற்றை மின் பதிப்பாக்கம் செய்யும் திட்டத்தை உலக நாடுகளுக்கும் விரிவாக்க வேண்டும் என முதல்வரையும், நிதியமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.