ஆட்சியின் தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நாடகமாடுகிறார்: தமிழிசை சவுந்தரராஜன்!

தனது ஆட்சியின் தவறுகளை மறைக்கவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தைக் கூட்டி இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினைக்காக கர்நாடகாவைச் சார்ந்த தலைவர்களைச் சந்திக்காத முதல்வர் மு.க. ஸ்டாலின், முல்லைப் பெரியார் பிரச்சனைக்காகக் கேரள முதல்வரைச் சந்திக்காத மு.க. ஸ்டாலின் இன்று மக்களை ஏமாற்ற அறிவிக்கப்படாத தொகுதி மறுவரையறை விவகாரத்தை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இது மறுவரையறை கூட்டம் என்பதை விட மறைப்பதற்கான கூட்டம். தனது ஆட்சியின் தவறுகளை மறைக்கவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வந்தபோது, ​தொகுதி மறுவரையறையில் ​தமிழகம் பாதிக்கப்படாது என்று தெளிவுபடுத்தினார். எனவே எந்த அடிப்படையில் இந்தக் கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார் என்று தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.