சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்!

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடந்த்தப்பட்ட தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக திருமாவளவன் பதிவிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் கூறியுள்ளதாவது:-

சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது. எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பதிவிட்டுள்ள கண்டன பதிவில் கூறியுள்ளதாவது:-

யூட்யூபர் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் வீட்டில், அவருடைய தாயார் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிலர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீடு முழுக்கச் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.

ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயதுமுதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்த இழிவான செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.