பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது தாயார் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டில் புகுந்து சூறையாடியதாக வீடியோவை தனது ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
திராவிட மாடல் என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த போலி திராவிட மாடல் திமுக அரசிற்கு எதிராக, அவர்கள் செய்யும் ஊழலையும், முறைகேடுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்துவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் இந்த அராஜகப் போக்கை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த திமுக ஆட்சியில், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் ஊழலை, தொடர்ந்து தனது சவுக்கு மீடியா மூலமாக வெளிக்கொணர்ந்து வருகின்ற திரு.சவுக்கு சங்கர் அவர்களது இல்லத்தில், அவர் இல்லாத சமயம் பார்த்து அத்துமீறி நுழைந்திருக்கும் கும்பல் மீது, காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அப்பட்டமான பழிவாங்கல் செயலாகும்.
இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அறிக்கை விடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா? இதுதான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயக ஆட்சியா? இன்று திரு.சவுக்கு சங்கர் மீதும், அவரது தாயார் மீதும் வன்முறையை ஏவி விட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.