தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை வைக்கப்படுமா? என்று வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தில் பேசிய ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், “தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு 1972 இல் அன்றைய முதல்-அமைச்சர் சிலை வைத்தார். உள்ளே வைக்க முடியாது என்று தொல்பொருள் துறை சொன்னதால், வெளியிலே வைத்தார்கள். கப்பற் படையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவன், தெற்காசியாவையே வென்றவன், இன்றைக்கு இந்திய கடற்படைக்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 216 அடி உயரமுள்ள பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை வைக்க முடியுமா? அறநிலையத்துறையால் முடியவில்லை என்றால் அரசே வைக்குமா என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “மன்னர்களுடைய புகழை போற்றிப் பாதுகாக்கின்ற அரசு திராவிட மாடல் அரசு என்பதற்கு ஒப்பாக, ராஜராஜனின் ஆயிரமாவது ஆண்டு சதய விழாவை எடுத்த ஆட்சி கலைஞர் ஆட்சி என்பதை தெரிவித்துக் கொண்டு… கோரிக்கையின் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு நிச்சயம் வாய்ப்பு இருந்தால் அவர் கூறிய அந்த சிலை அமைப்பதற்கு உண்டான நடவடிக்கையை, இந்த அரசு இந்து சமய அறநிலையத்துறையுடன் மேற்கொள்ளும்” என்று பதிலளித்தார்.