இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுடன் ராமேசுவரம் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 21 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 159 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 60 மீனவர்கள் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளாக யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள நடைபெற்ற தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்தித்துப் பேசினர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் தங்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தியதாகவும், தங்களது குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ராமேசுவரம் மீனவர் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.