ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம்: அஸ்வினி வைஷ்ணவ்!

ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதிக்கும் தார்மீக கடமையிலிருந்து மத்திய அரசு விலகி செல்கிறதா? அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்? ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழகம் தடைவிதித்துள்ளது’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

மத்திய அரசின் தார்மீக உரிமை குறித்து கேள்வி எழுப்ப தயாநிதி மாறனுக்கு உரிமை இல்லை. அரசியல் சாசனத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவத்தின்படி நாடு செயல்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் போன்றவற்றுக்கு தடை விதிப்பது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களின் கீழ் வருகிறது. இவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்டம் இயற்றலாம். புகார்கள் அடிப்படையில் 1,410 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது பாரதிய நியாய் சன்கிதா சட்டத்தின் 112-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.