அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research) மொத்தமுள்ள 1,448 பணியிடங்களில் 839 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதேபோல், பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Bhabha Atomic Research Centre) மொத்தமுள்ள 14,445 பணியிடங்களில் 3,841 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (Indira Gandhi Centre for Atomic Research) மொத்தமுள்ள 2,730 பணியிடங்களில் 596 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்திய அணுசக்தி கழக நிறுவனத்தில் (Nuclear Power Corporation of India Limited) மொத்தமுள்ள 15,088 பணியிடங்களில் 4,343 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிறுவனங்கள் அணுசக்தித் துறையின் கீழ் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதான் ‘நல்ல’ நிர்வாகத்திற்கான எடுத்துக்காட்டா என தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், இந்த வேலைகளுக்கு ஆட்கள் இல்லாததால்தான் நிரப்பப்படவில்லயா என்றும் வினவியுள்ளார்.