பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வேலூர் மாவட்டத்தில் இன்று 21 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். மத்திய அரசுக்கு எதிராக இதில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
இந்த ரூ. 4,034 கோடி யாருடைய அப்பன் வீட்டு பணமும் கிடையாது. மத்திய அரசின் பணம். இதை நிறுத்தக் காரணம் இந்த திட்டத்தின் பெயர்தான். ‘மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது மோடி அரசுக்கு பிடிக்கவில்லை. காந்தியை சுட்டவர்கள் அவர்கள். காந்தியின் பெயரில் இத்திட்டம் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை அதனால்தான் பணம் தர மறுக்கிறார்கள்.
மோடி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. பாஜக, மோடி என்று சொல்லி இனி ஓட்டுக் கேட்க முடியாது. அந்த அளவுக்கு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்கள். மோடி அல்ல, அவன் பாட்டன் சொன்னாலும் மக்கள் பணத்தை வாங்கித் தராமல் விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் வேலூரில், திமுக – தவெக போட்டி என விஜய் கூறியது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “யார் யாருக்கு போட்டியோ, அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, எங்கள் கட்சியில் நாங்கள் உழைப்போம், நாங்கள் ஜெயிப்போம். யார் யாரோடு சேருகிறார்கள் என்றெல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை” என்று தெரிவித்தார்.