காஸ் டேங்கர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

வாடகை ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள கேஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 5 ஆயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்தாண்டு அறிவிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 27ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 4 நாட்களாக போராட்டம் நீடித்து வந்ததது. இதனால் தென்னிந்தியா முழுவதும் சமையல் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குகொண்டு வர ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.

இச்சூழலில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சங்கத்தினர் விடுத்த பெரும்பாலான கோரிக்கைகளை ஆயில் நிறுவன அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

எனவே வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பால் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.