இளைஞர்கள் தற்கொலைக்கு பல காரணங்கள் இருக்கும் போது, திறமைக்கான ஆன்லைனில் ரம்மி விளையாடுவதால் தற்கொலை செய்து கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது என ஆன்லைன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால் பல இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதால், ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த 2022ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்-லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்ததை உறுதி செய்ததுடன், திறமைக்கான ஆன்-லைன் ரம்மி, போக்கர் (ஒருவகையான சீட்டாட்டம்) விளையாட்டுக்களுக்கான விதிகளை வகுக்க 2023ம் ஆண்டு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் படி ஆன்-லைன் விளையாட்டுக்களை ஒழுங்குமுறைபடுத்த விதிமுறைகளை வகுத்து 2025ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. அதில், பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்கெடுப்போர் ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடும் போது, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை ஏற்படுத்தவும், விளையாடுவோர் ஒரு நாளைக்கு, ஒரு வாரத்துக்கு, ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் வைத்து விளையாட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரையும் விளையாட அனுமதிக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ் மற்றும் எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வர்த்தக உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை அடிமைப்படுத்துவதாக கருத முடியாது. நீண்ட நேரம் சுய நினைவுடன் பயன்படுத்துவதாகவே கருத வேண்டும். 9 வகையான அறிவியல் காரணங்களுடன் ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் என விதியில் குறிப்பிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. ஆன்லைன் விளையாட்டு திறமைக்கானது. திறமையாக விளையாடுபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
பல விளையாட்டுகளில் நீண்ட நேரம் செலவிடும் நிலையில், திறமைக்கான ஆன்லைன் ரம்மி அடிமைப்படுத்தும் என்பதை ஏற்க முடியாது. தற்கொலைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்ததற்காக மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக அரசு தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தார்.