மோகன்லால், பிருத்விராஜ் நடித்த எம்புரான்- லூசிஃபர்-2 திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அவற்றை நீக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன், எம்புரான் திரைப்படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. ஆனால் படத்தைப் பார்த்தவர்கள் கூறியதை கேட்ட போது, எனக்கு பயமும் கோபமும் வந்தது. இது தேவயற்ற செயல். இந்த திரைப்பட காட்சிகளால் வேறு மாநிலங்களிலும் பிரச்சனை வரலாம் என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள், சென்சாரில் நீக்கப்படவில்லை; ஆனால் படம் வெளியான பின்னர் இந்த செய்தி வெளியே வந்தது. அதனால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன என்றார்.
முல்லைப் பெரியாறு என்ற பெயரைக் குறிப்பிடாமல், அணைக்கு எதிராக, திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருக்கிறது; இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை,குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும் ஆகிய வசனங்கள் இடம் பெற்றிருப்பதே சர்ச்சைக்கு காரணம்.
இன்னொரு பக்கம், எம்புரான் படத்தின் மெயின் வில்லனாக இந்துத்துவா கட்சித் தலைவர் ஒருவர் காட்டப்பட்டுள்ளார். குஜராத் வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளியே பிரதான வில்லனாக காட்டப்படுவதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து எம்புரான் திரைப்படத்தில் 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன; மேலும் 21 இடங்களில் காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள என்பதும் குறிப்பிடத்தக்கது.
