இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் உள்ள இந்திய அமைதிப் படைக்கான நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன் மலையகம் மற்றும் ஈழத் தமிழர் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இலங்கைக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் அனுர குமார திசநாயக்கவை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இந்தியா- இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பயணத்தின் போது, வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் இலங்கையின் மிக உயர்ந்த விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா வழங்கினார். இந்திய தலைவர் ஒருவர் இலங்கையின் உயரிய விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா-இலங்கை நட்புறவை வலுப்படுத்துவதில் நீடித்த பங்களிப்பை வழங்கியதற்காக பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (ஐ.பி.கே.எப்) நினைவிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய அமைதி காக்கும் படையின் துணிச்சலான வீரர்களை அவர் பாராட்டினார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, ஐக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கான உயர்பணியில் தமது வாழ்வை தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையின் துணிச்சல் மிக்க வீரர்களை இச்சந்தர்ப்பத்தில் நாம் நினைவுகூர்கிறோம். அவர்களின் அசைக்க முடியாத தைரியமும், அர்ப்பணிப்பும் நம் அனைவரினதும் உத்வேகத்தின் ஆதாரமாக நிலைத்திருக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி- மலையகத் தமிழர்களுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என கூறியுள்ளார்.
மேலும் ஈழத் தமிழர் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள். அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் என்றார் பிரதமர் மோடி.
பிரதமர் ராஜீவ் காந்தி – இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இடையே 1987-ல் இந்தியா- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போது இலங்கையில் தனிநாடு கோரிய ஈழத் தமிழர்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியா- இலங்கை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து இந்திய அமைதிப் படை இலங்கைக்கு சென்றது. ஈழத் தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப் படை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஈழத் தமிழர்கள் முன்வைத்தனர். இதன் விளைவாக ஈழத் தமிழர்களின் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையே யுத்தம் நடைபெற்றது. பின்னர் விபி சிங் பிரதமராக இருந்த போது, இலங்கையில் இருந்து இந்திய அமைதிப் படை திரும்பப் பெறப்பட்டது.