தமிழகத்துக்கு மும்மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகின்றனர்: பிரதமர் மோடி!

“தமிழகத்துக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதிலும் சிலர் நிதிக்காக அழுகின்றனர்” என்று யாருடைய பெயரையும் வெளிப்படையாக குறிப்பிடாமல் பிரதமர் மோடி திமுகவை சூசகமாக விமர்சித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் பாம்பன் – மண்டபம் இடையே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கடந்த 2014ம் ஆண்டு முதல் மோடி அரசு தமிழகத்துக்கு நிதி அளித்து வருகிறது. இது கடந்த ஐக்கிய முற்போக்கு அரசு ஆட்சியை விட மூன்று மடங்கு அதிகம். அப்போது திமுக யுபிஏ அரசில் அங்கம் வகித்தது. தமிழகத்தின் ரயில்வே பட்ஜெட்டும் 7 மடங்கு அதிகரித்துள்ளது. சிலர் காரணம் இல்லாமல் அழுவதையே ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் அதைத் தொடர்ந்து செய்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.கள் அவர்களின் மொழிப் பெருமையைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் எனக்கு அவர்கள் கடிதம் எழுதும் போது அதில் ஆங்கிலத்திலேயே கையெழுத்திடுகின்றனர். ஏன் அதில் தமிழில் கையெழுத்திடுவதில்லை? அவர்களின் மொழிப் பெருமை அப்போது எங்கே போனது?

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டது. அப்போது யுபிஏ கூட்டணியில் யார் முக்கியத் தலைவர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள எனது ஏழை எளிய சகோதர, சகோதரிகள், மத்திய அரசின் உதவி மூலமான திட்டத்தின் கீழ் 12 லட்சம் வீடுகளைப் பெற்றுள்ளனர். நாடுமுழுவதும் 12 கோடி குடும்பங்கள் தங்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இதில், 1.1 கோடி குடும்பங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் எனது தாய்மார்களும், சகோதரிகளும் முதல் முறையாக இந்த வசதியைப் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.