எடப்பாடி பழனிசாமி காவி உடையில் பேரவைக்கு வராதது மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!

சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்.8) கருப்புச் சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர்.

தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில், திங்கட்கிழமை (நேற்று) சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிடும் வகையில் ‘யார் அந்த தியாகி ‘ என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். தொடர்ந்து டாஸ்மாக் ஊழலை பற்றி விவாதிக்குமாறு பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேட்ஜ் அணிந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் வெளியேற்றி, முதல்வர் வேண்டுகோளுக்கு இணங்க சட்டப்பேரவையில் இருந்து ஒரு நாள் மட்டும் சஸ்பென்ட் செய்தார்.

இதையொட்டி இன்று சட்டப்பேரவைக்கு வந்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்து கவனம் ஈர்த்தனர். இன்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையனும் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார்.

இதற்கிடையில் அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து வந்ததை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவி உடையில் பேரவைக்கு வராதது மகிழ்ச்சி’ என்று கூறினார்.