நமது அரசியலமைப்பு 1947-ல் உருவாக்கப்பட்டது என்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும் ராகுல் காந்தி கூறியதை அடுத்து, பாஜக அவரை கேலி செய்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த தனது கருத்துகளால் புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார். அரசியல் சாசனம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “இந்த முக்கிய ஆவணம் 1947-ல் உருவாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. அம்பேத்கர், மகாத்மா காந்தி, குருநானக், ஜவஹர்லால் நேரு மற்றும் சந்த் கபீர் ஆகியோரின் சிந்தனைகள் இதில் உள்ளன” என்று அவர் கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வேறு எந்த எதிர்க்கட்சித் தலைவரும் இதுபோன்று அபத்தமாகப் பேசியதில்லை என்றும் இது நாட்டுக்கு அவமானகரமானது என்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி கூறும்போது, “ராகுல் காந்தி தனது ‘அறிவால்’ நாட்டை “அதிர்ச்சியில் பேச முடியாமல்” ஆக்குகிறார். 1947 இல் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படவில்லை என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியவில்லை. அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகள் மட்டுமே அப்போது தொடங்கப்பட்டிருந்தன. அரசியலமைப்புச் சட்டம் நவம்பர் 26, 1949 அன்றுதான் இறுதி செய்யப்பட்டது. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாளை அரசியலமைப்புச் சட்ட நாளாக அறிவித்தார். இதுபோன்ற தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், உண்மையை புரிந்துகொள்ள அரசியலமைப்புச் சட்ட தினம் தேவைப்பட்டது. காங்கிரஸ் அரசியலமைப்புச் சட்ட தினத்தை வரவேற்கவில்லை, மறைமுகமாக அதை எதிர்த்தது. அதோடு, அரசியலமைப்பு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் ராகுல் காந்தி கூறுகிறார்” என்று விமர்சித்துள்ளார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், “ராகுல் காந்தியின் சுயசரிதை எழுதப்பட்டால், அதற்கு ‘தோல்வியின் சின்னம்’ என்று தலைப்பிடலாம். அவர்தான் இன்று காங்கிரஸ் கட்சியை வழிநடத்துகிறார். அரசியலமைப்பு எப்போது எழுதப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்பது கூட அவருக்குத் தெரியாது. அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் 55க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது, மேலும் 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமராக வேண்டும் என்று கனவு காணும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றித் தெரியாமல் இருப்பது ‘சங்கடமாக’ இருப்பதாக பாஜக தலைவர் அஜய் அலோக் விமர்சித்துள்ளார். “அவர்கள் அரசியலமைப்பைப் பற்றி இடைவிடாமல் பேசுகிறார்கள், ஆனால் அதைப் புரிந்து கொள்ளவே இல்லை. நமது அரசியலமைப்பு 1947 இல் உருவாக்கப்பட்டது என்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும் அவர் கூறுகிறார். அது என்ன வகையான அறிவு? அவர் விஷத்தைப் பரப்புகிறார், அறிவுத் திறன் இல்லை, ஆனாலும் அவர் எதிர்க்கட்சியை வழிநடத்துகிறார். இது இந்தியாவுக்கு அவமானகரமானது” என்று அலோக் கூறியுள்ளார்.