குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி!

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (93) வயது மூப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது மகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

அதேபோல அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் தமிழிசைக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோரும் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.