ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர் குமரி அனந்தன்: பிரமேலதா!

தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர். ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர் என்று குமரி அனந்தன் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-

முன்னாள் ஆளுநரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர். ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர், நல்ல மனிதர், பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், தமிழ் மீது தீராத பற்று கொண்டவர்.

தமிழகத்தில் பூரண மது ஒழிப்பை வலியுறுத்தி நடைபயணம் செய்தார், காங்கிரஸ் கட்சியில் மூத்த அரசியல்வாதியாக இருந்து இன்றைக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கழகத்தை சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.