செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்: வழக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட கூடுதல் குற்றபத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேரில் ஆஜராகினர்.

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி செய்த வழக்கில் அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், எம்.கார்த்திகேயன், ஜி.கணேசன், எம்.வெற்றிச்செல்வன், எஸ்.அருண் ரவீந்திரா டேனியல், டி. ஆல்பர்ட் தினகரன், எஸ் ஜெயராஜ் குமார், சி.பழனி, எஸ்.லோகநாதன்,டி.பிரபு, அனுராத ரமேஷ் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில், அமலாக்கத் துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஏப்ரல் 9-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, அசோக்குமார் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி இன்று (ஏப்.9) இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜாரகினர். அவர்கள் தரப்பில் வழக்கறிஞர்களும் ஆஜராகினர்.

அப்போது அமலாக்கதுறை தரப்பில், கூடுதல் குற்றபத்திரிகையுடன் சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. அவற்றை சிடியில் தருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், “மின்னனு ஆவணமாக இல்லமால் காகித வடிவில் வழங்க வேண்டும் எனவும், அப்போதுதான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் உறுதி தன்மை நிலை நிறுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு “புதிய சட்டத்தின் அடிப்படையில் மின்னனு முறையில் ஆவணங்கள் வழங்கலாம்” என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் தலா 2 லட்சம் ரூபாய்கான ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.